Sunday, December 18, 2011

Beyond 'Common Sense'


காட்சி 1:
"அப்பா! பெருந்துறை ரோட்டுல 'Reliance Communications' எங்கப்பா இருக்கு?"

சாப்பிட்டுக் கொண்டிருந்த என் நண்பன் கேட்டான்.

"என்னத்திற்கு?"

"என்னோட இன்டர்நெட் கனெக்ஷன க்ளோஸ் பண்ணனும்."

"அந்த ரோட்லதான் இருக்குன்னு யார் சொன்னது?"

"போன் பண்ணிக் கேட்டேன். சொன்னாங்க!"

"போன் நம்பர் என்ன?"

நண்பனின் அம்மா வைத்திருந்த கொள்ளுத் துவையலில் காரணமின்றி ஊடுருவி இருந்த மல்லி விதைகளை, சலிப்புடன் கூடிய பொறுப்புடன், ஒவ்வொன்றாய் பொறுக்கித் தட்டின் ஓரமாய் வைத்துக்கொண்டிருந்த என் கவனத்தை இழுத்தது இந்தக் கேள்வி.

மேம்போக்காய்ப் பார்த்தால் சாதாரணமாகத் தோன்றினாலும், இந்தக் கேள்வியின் நோக்கம் புரியவில்லை. நண்பன் தேடும் விடைக்கு எந்த விதத்திலும் உதவக்கூடிய கேள்வியாக இல்லையே இது. இதைக் கேட்டவரின் நோக்கம்தான் என்ன? தன் மகனின் ஞாபகத் திறனுக்கு வைக்கப்பட்ட சோதனையா? தனக்குத் தெரியவில்லை என்பதை மறைக்கும் விதமாய் விழுந்த காரணமற்ற வினாவா? - என்று என் ஊகங்களின் எல்லைகளை விரிப்பதற்கு முன், சில பொழுதுகளே என் மூளை ஓட்டிய காட்சி தங்களின் பார்வைக்கும்...

காட்சி 2:
கல்லூரி வளாகத்தில் இயங்கிக் கொண்டிருந்த STD பூத் வரிசையில் நான்.

நினைத்த பொழுதில் பேச கைபேசியோ, நெருங்கியவர்களின் தொலைபேசி எண்களைத் துண்டுச் சீட்டிலாவது குறித்து வைக்கும் பொறுப்புணர்வோ என்னிடம் இல்லாத காலம். எனது முறை வந்தது.

அவசரமாய் அப்பாவிடம் பேச வேண்டும். இந்த நேரத்தில் அலுவலகத்தில் இருப்பார். நம்பர்? மூளையே மூலதனம் என்று, முன்னே அதன் மூலையிலே போட்டு வைத்திருந்த நம்பர்களைத் துழாவினேன்.

STD இலக்கங்களும், அங்கிரண்டு இங்கிரண்டு என நான்கு இலக்கங்களும் பொறுக்கி எடுத்துவிட்டேன். 0451-42_ _01. காலி இடங்களில் '67' வருமா? '76' வருமா? முட்டிக்கொண்டு நின்றேன். பின்னாலிருந்த வரிசை முறைத்துக் கொண்டு நின்றது. கணிதம் கற்றுக்கொடுத்த "combination"-ஏ சரணம்; 'இரண்டில்' ஒன்று பார்த்துவிடுவோம் என்று பொத்தான்களை அமுக்கினேன்.

"ஹலோ! யார் பேசறது?" - எதிர்முனை.

"ஹலோ! இது Fire Service-ங்களா?"

"யாருய்யா நீ? வம்பு பண்றியா? Fire Service-க்கு 101-ன்னு கூடவா தெரியாது?"

"இல்லைங்க என்.."

"Wrong number. மடச் சாம்பிராணிங்க! கழுத்தறுக்கராணுக!"

'டொக்'...

மறுபடியும் காட்சி 1:

"நான் call center-க்கு போன் பண்ணித் தெரிஞ்சுக்கிட்டேன்பா. அந்தக் கடை நம்பர் தெரியல!"
-என்று அமைதியாகப் பதில் சொன்னான் தொலைபேசித் துறையில் வேலை செய்து ஒய்வு பெற்றவரின் மகனான எனது நண்பன்.

அந்தப் பதிலுக்கும் அதற்குமுன் கேட்கப்பட்ட 'அர்த்தமுள்ள' கேள்விக்குமாய்ச் சேர்த்து, தீயணைப்புத் துறையில் வேலை செய்து ஒய்வு பெற்றவரின் மகனான நான், ஒரு புன்னகையை உதிர்த்தேன்; மல்லி விதைகளுக்கும் ஒரு காரணம் இருக்கக்கூடும்!

No comments: